சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்...


திரைஇசைப் பாடல்களைக் கேட்டு ரசிப்பது என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான விஷயம். முக்கியமாக ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்தமான பாடல்கள் என்று ஒரு பெரிய வரிசையே வைத்திருப்பர்கள். அப்படிப் பாடல்கள் ஒருவருக்குப் பிடித்துப் போக பல்வேறு காரணங்கள் இருக்கும். அதில் முக்கியனானது இசை. அதிலும் சிலருக்கு மனதை வருடும் மெல்லிசைப்
பாடல்கள் பிடிக்கும்; சிலருக்கு 'குத்துப்' பாடல்கள் பிடிக்கும். மற்றொன்று பாடல் வரிகள். சில பாடல்களில் இசையமைப்பு, வரிகள் என்று இரண்டுமே நன்றாக இருக்கும்.

அதோடு மட்டுமில்லாமல், சில பாடல்களைக் கேட்கும் போது அது நம்மை பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்லும். அதாவது, அப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தைப் பார்த்த இடம்,

ஊர், கூடப் படம் பார்த்த நண்பர்கள், முக்கியமாக கல்லூரி வாழ்க்கை என பல நிகழ்ச்சிகள் நம் கண் முன்னே விரியும்.

சில பாடல்களைக் கேட்கும் போது, அந்தப்பாடலின் திரைப்படக்காட்சிகள் கூட நினைவுக்கு வரும். அதாவது, அந்தப் பாடல் ஒரு நல்ல திரைப்படத்தில் திரைக்கதைக்குப் பொருத்தமாக, பொருத்தமான இடத்தில் இடம் பெற்றிருந்தால். ஏனென்றால், சில பாடல் விரிகள் அந்தப் படத்தின் கதைக் கருவை அப்படியே சில வரிகளில் சொல்லிவிடும். இன்னும், சில பாடல்களில் இடம் பெற்ற ஒரே ஒரு வரி, அந்தப் படத்தின் 'ஒரு வரிக் கதை' என்று சொல்லும் விதத்தில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பாடல் வரி தான். "சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்"

மின்சாரக்கனவு படத்தின் கரு என்பது 'யாருக்கு எப்போது காதல் வரும் என்பது யாருக்கும் தெரியாது; ஏன் அவங்களுக்கே தெரியாது" என்பது தான். அதைத் தான் இந்தப் பாடல், "சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்" என்று அழகாக ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டது.

மனதை சிலர் குரங்கு என்கிறார்கள். ஆனால், இங்கே, அதே மனசு ஒரு பூவாக சொல்லப்படுகிறது. அதுவும், மொட்டாக இருந்து மலரும் பூ என்று. உண்மையில் மனசு ஒரு புதிர் தான்.

சரி. இப்போது பாடல் கேட்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. ஆனால், இன்னும் அந்தப் பாடல் இடம் பிடித்த திரைப்படத்தைப் பார்க்க வில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இபோது என்ன பண்ணலாம்? நீங்களே பாடல் வரிகளுக்க்கு ஏற்ற மாதிரி கதையையும், திரைக்கதையையும் எழுத வேண்டியது தான். சமீபத்தில், 'சிவாஜி' படப் பாடல்கள் வெளியிடப்பட்டு; ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பு அதைத்தானே எல்லாப் பத்திரிக்கைகளும் செய்தது.

சரி. மீண்டும் அந்தப் பாட்டுக்கு வருவோம். அந்த முழுப் பாடல் வரிகளும் இங்கே.....

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்பேன்
(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே)




தினம் ஒரு இலவச மென்பொருள்


ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்பது மென்பொருள் எழுதுபவர்கள் அல்லது பெரிய நிறுவனங்கள் மட்டும் பயன்படுத்தும் ஒரு கருவி ஆக இருந்தது. ஆனால், இப்போது எல்லோரும் பயன்படுத்தக் கூடிய ஒரு கருவியாக மாறிவிட்டது.

அதாவது, வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர்களுக்குத் தேவையான அளவில் பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பு எழுத, அலுவலகத்தில் விட்டுப் போன வேலைகளை வீட்டில் செய்ய, கல்வி பயில, சில நேரங்களில் பாட்டுக் கேட்க, திரைப்படம் பார்க்க, புகைப்படங்களைத் திருத்தி அமைக்க, வீடியோ பைல்களை VCD மற்றும் DVDக்கு மாற்ற, முக்கியமாக இணையத்தில் உலாவ, மின்னஞ்சல் அனுப்ப என்று பல விதங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி இருப்பது போல், வீட்டிற்கு ஒரு கம்ப்யூட்டர் இருக்கப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை; அதுவும் இணைய வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்.

கம்ப்யூட்டரின் பயன்பாடுகள் மற்றும் தேவைகள் அதிகமாக, அவற்றைப் பூர்த்தி செய்யக் கூடிய மென்பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. என்வே, அத்தகைய மென்பொருட்களைப் பற்றிய தகவல்களும், அவற்றை எவ்வாறு எதற்குப் பயன்படுத்த்லாம், எங்கு கிடைக்கும் என்பதைப் பற்றிய அறிவும் அவசியமாகிறது.

வணிக ரீதியிலான மென்பொருட்களோடு, open source மற்றும் freeware எனப்படும் வகையிலான இலவச மென்பொருள்களும் அதிக அளவில் கிடைக்கின்றன. அப்படி வணிக ரீதியிலான மென்பொருள்களைத் தயார் செய்யும் நிறுவனங்கள் கூட சிலசமயம் தங்கள் மென்பொருட்களை இலவசமாகத் தருகிறார்கள் - விளம்பர நோக்கில்.

அப்படிப்பட்ட இலவச மென்பொருட்களைத் தருகிற இணையதளம் தான் http://www.giveawayoftheday.com .

இந்த இணையதளத்தில் இருந்து நீங்கள் தினமும் ஒரு மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், அப்படி அந்த மென்பொருளை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொண்ட உடன் அல்லது அன்றைய தினத்திற்குள் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி விட வேண்டும். 24 மணி நேரம் கழித்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவினால், அந்த மென்பொருள் முழுமையாக வேலை செய்யாது அல்லது சில நேரம் அதை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவ முடியாமலே போகலாம்.

அவ்வாறு, பதிவிறக்கம் செய்தவுடன், கீழே உள்ள 4 வழி முறைகளில் எதாவது ஒன்றின் மூலம் நீங்கள் அந்த மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவலாம்.

1. முதலில் activation.exe பைலை இயக்குதல். பிறகு setup.exe பைலை இயக்குதல்.
2. முதலில் setup.exe பைலை இயக்குதல். பிறகு activation.exe பைலை இயக்குதல்.
3. முதலில் setup.exe பைலை இயக்குதல். பிறகு அந்தந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்தல்.
4. முதலில் setup.exe பைலை இயக்குதல். பிறகு கொடுக்கப்பட்டுள்ள license key-ஐ உள்ளீடு செய்து பதிவு செய்தல்.

இவ்வாறு எந்த வழிமுறையில் நிறுவ வேண்டும் என்பதை அந்த மென்பொருள் தொகுப்போடு கொடுக்கப்பட்டுள்ள readme.txt பைலை படித்து தெரிந்து கொள்ள்லாம்.

இந்த மென்பொருட்கள் மட்டுமல்லாது, நீங்கள் எத்தகைய மென்பொருளையும் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் முன் அதோடு கொடுக்கப்பட்டுள்ள readme.txt பைலை படித்து விட்டு செய்வது நல்லது.




அயிரைமீன் குழம்பு வைப்பது எப்படி? - கவிஞர் வைரமுத்துவின் பதில்


பாத்துப்பார்த்து உசுரோட வாங்கணும் அயிரைமீன. ரொம்பப் பொடுசாவும் இருக்கப்படாது; ரொம்பப் பெருசாவும் இருக்கப்படாது.

பாத்திரத்துல போட்டு அதுகமேல பால ஊத்தணும். பாலு ஒவ்வாது அயிரமீனுகளுக்கு, சாராயம் குடிச்ச ஆளு உண்மையக் கக்குவான் பாருங்க.... அப்படி வாய்க்குள்ள இருக்கிற கசடு, மண்ணுகளையெல்லாம் கக்கிப்புடும் கக்கி.

பால நல்லா இறுத்திட்டு உப்பு அள்ளி எறியணும் மீனுக மேல. செத்தவடத்துல எல்லாம் செத்துப்போகும்.

மண்வாசனை போக, தேங்காய்ப்பால ஊத்தி ஊறவிடணும்.

அப்புறம் மண்சட்டியில போட்டு ஒரசணும். மூணுதடவை ஒரசினாத்தான் வழவழப்புப் போகும்; பவளம் பாசி மாதிரி ஆயிரும்.

இப்ப மஞ்சட்டியில நல்லெண்ணெயை ஊத்திச் சோம்பு போட்டுச் சுடவைக்கணும். சோம்பு கல்யாணப் பொண்ணு மாதிரி லேசா வெக்கப்பட்டுச் சிவக்குதுன்னு தெரிஞ்சு வெந்தயம் போடணும். எண்ணெயைக் காயவிட்டு , சின்னவெங்காயம் , மூக்கக்கிள்ளுன பச்ச மொளகா, தக்காளி, கருவேப்பில சேத்து வதக்கி வச்சுக்கிறணும்.

அரைச்சு ஊத்துற மொளகா மஞ்சள்ல இருக்கு அயிர மீன் குழம்பு சூத்திரம்.

சீரகம்,சோம்பு, பச்சமொளகா, மல்லிப்பொடி, மஞ்சப்பொடி, பொன்முறுவலா வறுத்த வெந்தயம், வெங்காயம், வெள்ளப்பூண்டு, உப்பு வச்சு அம்மியில அரைக்கணும். சும்மா வழுவழுன்னு வழிச்சு எடுக்கணும். அதுல அரைச்ச தேங்கா சேத்து வதக்கணும். வதக்க வதக்க அதையே அள்ளித்திங்கலாமான்னு ஆசைவரும். இப்ப நல்லெண்ணெயில் போடணும் அரைச்சு வைச்ச அய்ட்டத்த. அது சிவீர்ன்னு செவக்கற வரைக்கும் காய்ச்சணும். புளி கரைச்சு ஊத்திக் கொதிக்க வைக்கணும்.

தண்ணியக் குழம்பா வத்தவிட்டு , கெட்டிப்பதம் வந்ததும் அயிரமீனுகள அள்ளி உள்ள போடணும். பத்துநிமிசம் கொதிக்கவிட்டு வெந்தயத்தூள வெதச்சு எறக்கிவச்சா சும்மா மூக்குல நொழஞ்சு மூளையில மூல முடுக்கெல்லாம் ஓடிப்போய் உக்காரும் குழம்புவாசன.

ஆனா ஒண்ணு. சரக்குல மட்டுமா இருக்கு சமையல் ருசி?

ஆத்தா, அய்த்த, மதினி, மச்சினி கைப்பக்குவத்துல இருக்கு தாயி, கருவாடு மீனாகிறதும் மீனு தேனாகிறதும்.

-கவிஞர் வைரமுத்து.




முதல் பதிவு...


நண்பர்களே வணக்கம்,

வளர் தமிழ் என்கின்ற இந்த வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இடுகைகளின் மூலம் யாராவது பயன் அடைந்தால் இன்னும் நல்லது.

நன்றி.